அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளடக்கப்படவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போர்நிறுத்த முயற்சிக்கு அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தினாலும், ஈரான் ஒருபோதும் அணுசக்தி அல்லது ஏவுகணை அச்சுறுத்தலாக மாறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் நோக்கில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானுடனான மோதலை விட லெபனானில் தரைவழித் தாக்குதல்களைத் தொடர்வதே இஸ்ரேலுக்கு தற்போது மிக முக்கியமான இலக்காக உள்ளது.
நெதன்யாகுவின் இந்த நிலைப்பாடு, சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகளுக்கு ஒரு பெரிய சவாலாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.