21/4 தாக்குதல் - முன்கூட்டியே புலனாய்வு தகவல் கிடைத்தது

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 8 இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 04.14 -இற்கு தமக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.





அது தொடர்பில் தாம் உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக கொழும்பு விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் அவர் நேற்று கூறியுள்ளார்.





உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கில் மூன்றாவது நாளாகவும் நிலந்த ஜயவர்தன நேற்று சாட்சி வழங்கினார்.





ஏப்ரல் 20 ஆம் திகதி கிடைத்த புலனாய்வுத் தகவலை தொலைபேசி மூலம் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.





எனினும், அந்த தகவல் தொடர்பில் அவர் அவ்வளவு கவனம் செலுத்தாமையை அறிந்து கொண்டமையினால், பாதுகாப்பு செயலாளருக்கும் அதனை அறிவித்ததாக நிலந்த ஜயவர்தன இன்று சாட்சியம் வழங்கியுள்ளார்.





பொலிஸ்மா அதிபர் இந்த தகவலை பாரதூரமாக கவனத்திற்கொள்ளவில்லை என்பது தமக்கு தெரிந்ததாக பாதுகாப்பு செயலாளரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என கிடைத்த தகவல்கள், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி நடைபெற்ற பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கூட வௌிப்படுத்தப்படவில்லை எனவும் அதனை மறைத்து வைத்திருக்க வேண்டிய எவ்வித தேவையும் தமக்கு இருக்கவில்லை எனவும் நிலந்த ஜயவர்தன கூறியுள்ளார்.





நாட்டில் அவ்வேளையில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதனை வௌிப்படுத்துவதனால் ஏற்பட முடியுமான அனைத்து பிரச்சினைகளையும் தாம் எதிர்கொள்வதற்கு நேரிடுவதால், அது தொடர்பில் அன்றைய தினம் கலந்துரையாட முயற்சிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





நம்பத்தகுந்த புலனாய்வு தகவல்களை பொறுப்புடன் வழங்கியிருந்த போதிலும், அதனை தடுத்து நிறுத்தாமைக்கான பொறுப்பினை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.





புலனாய்வு அதிகாரிகள் என்ற வகையில், தமக்கு கிடைக்கும் தகவல்களை உரிய தரப்பினருக்கு அறிவிக்கும் செயற்பாட்டையே தம்மால் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





தாக்குதல் மேற்கொள்ளப்படும் போது, ஜனாதிபதி இலங்கையில் இருக்கவில்லை. எனவே, பாதுகாப்பு செயலாளருக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 20 ஆம் திகதி தனக்கு கிடைத்த அனைத்து புலனாய்வு தகவல்களையும் அவ்வேளையிலேயே பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்ததாகவும் நிலந்த ஜயவர்தன கூறியுள்ளார்.