5 இடங்களில் சங்கிலி அறுப்பு - வவுனியாவில் சிக்கிய இளைஞர்கள்!

Sri Lanka 1 வருடம் முன்

banner

வவுனியாவில் தங்கசங்கிலி திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்களை ஹெரோயினுடன் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து அறுக்கப்பட்ட சங்கிலிகளையும் மீட்டுள்ளனர்.





இரு இளைஞர்களும் மகாறம்பைக்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்





வவுனியா இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் அண்மையில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர். அதன்பின்னர் சில நாட்களில் திருநாவற்குளம், வைரவபுளியங்குளம், யாழ் வீதி, பூந்தோட்டம் சந்தி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் வீதியால் சென்ற பெண்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்களிடம் முகவரி விசாரிப்பது போல வந்து அணிந்திருந்த சங்கிலிகள் அறுத்துச் செல்லப்பட்டதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் நிலையத்தில் தனித் தனி முறைப்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்குள் கிடைக்கப்பெற்றிருந்தன.





6 இடங்களில் இருந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடியின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.





இதன்போது மகாறம்பைக்குளம் பகுதியில் இரண்டு கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் 5 இடங்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்கள் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்பு இருந்தமை தெரியவந்தது.





இதனையடுத்து இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து இரண்டு கிராம் ஹெரோயின், அறுக்கப்பட்ட ஐந்து சங்கிலிகள், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் பூந்தோட்டம் மற்றும் மதீனா நகர் பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.