7 நாட்களுக்குள் இருவரை திருமணம் செய்த ஆசிரியை
Sri Lanka 1 வருடம் முன்
தனது முதலாவது திருமணம் முடிவடைந்து, ஏழு நாட்களுக்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியையும், அவரது புதிய மணமகனையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
முதல் கணவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்து, கம்பளை பொலிஸார் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த பதிவாளரிடம், இத்தகவலை தெரிவித்து , திருமணத்தை நிறுத்தி மணமக்களையும் அவர்களின் உறவினர்களையும் பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.
29 வயதான இந்த ஆசிரியை 8 வருடங்களாக காதலித்து வந்த நபரை கடந்த ஜூன் 23 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதன்பின்னர் பெற்றோரின் விருப்பத்தின்படி , மாவனெல்லயைச் சேர்ந்த மணமகனுடன் இரண்டு வருடங்கள் பழகிய பின்னர் ஜூன் 30 ஆம் திகதி கம்பளையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பொலிஸார் திருமணத்தை நிறுத்தி, மணமக்களையும் உறவினர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, விசாரணை செய்தபோது மணப்பெண் முதல் கணவனை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அஞ்சி மணப்பெண் அப்படி கூறிய போதும் - முதலாவது கணவர் திருமண படங்களையும் திருமணப் பதிவு சான்றிதழையும் காட்டி தான் கூறியதை உறுதி செய்துள்ளார்.
இதனால் திருமண உடையிலிருந்த மணமகளுக்கு முதலாவது கணவருடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து இரண்டாவது கணவர் தனக்கு ஏற்பட்ட வீண் செலவுகள் மற்றும் அகௌரவத்தை கருத்தில் கொண்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.
Related Posts