இலங்கையர்கள் ஆறு பேர் ரியூனியன் தீவில் தஞ்சம்!
World 1 வருடம் முன்
பிரான்ஸின் இந்து சமுத்திரத் தீவான ரியூனியனுக்கு சிறிலங்கா கொடியுடன் மீன்பிடிப்படகு ஒன்றில் வந்த ஆறுபேர் அங்கு தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிறு நண்பகல் தீவின் வடமேற்கே கடலில் தத்தளித்த அந்தப் படகை அவதானித்த கரையோரக் காவல் பொலீஸ் படையினர் அதனை அணுகி Pointe-des-Galets துறைமுகத்துக்கு கொண்டுவந்து கரை சேர்த்துள்ளனர். படகில் காணப்பட்ட
ஆறு ஆண்களும் மருத்துவப் பரிசோதனையின் பின்னர் அங்கு
தங்குவதற்கு அனுமதியின்றித் தரையிறக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அங்கு புகலிடம் கோர விருப்பம் தெரிவித்ததை அடுத்து தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரியூனியன் தீவின் பொலீஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களது நிலைவரங்களும் சுமார் 4 ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூரம் தாண்டி எவ்வாறு அவர்கள் இலங்கையில் இருந்து அங்கு வந்து சேர்ந்தனர் என்பது குறித்தும் அவர்களிடம் செஞ்சிலுவைச் சங்கத்தினரது உதவியுடன் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
பாரிஸில் இயங்கும் அகதிகள் மற்றும் நாடற்றவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அலுவலகம் (OFPRA) ஆறு பேருடைய விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும். சாதாரணமாக அதன்
தீர்மானம் 48 மணிநேரத்துக்குள் வழங்கப்படும். புகலிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் ஆறுபேரும் தீவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். நிராகரிக்கப்பட்டால் அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆயினும் குடியேற்றவசிகளுக்குச் சட்ட உதவிகளை வழங்கிவருகின்ற அமைப்புகளின் உதவியுடன் அவர்கள் மேன்முறையீடு செய்ய முடியும்.
ரியூனியன் தீவுக்கு இதற்கு முன்னரும் இலங்கை அகதிகள் படகுகளில் வந்து புகலிடம் கோரியுள்ளனர். 2018-2019 காலப்பகுதியில் கப்பல்கள் மூலம் பெண்கள், குழந்தைகள் உட்பட 200 இலங்கையர்கள் அங்கு வந்து தஞ்சமடைந்தனர். அவர்களில் சில டசின் கணக்கானோர் மட்டுமே அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். எஞ்சியோர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தற்சமயம் இலங்கையில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடிகளால் அங்கிருந்து சட்டவிரோதமாகப் படகுகளில் வெளியேறுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. அவர்களில் பலரது படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கடலில் வைத்து இடைமறிக்கப்படுகின்றன.
சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் வென்னப்புவ பகுதியில் இருந்து பிரான்ஸ் அழைத்துச் செல்வதாகக் கூறிப் பயண முகவர்களால் படகில் ஏற்றப்பட்ட 47 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்.
Related Posts