மாகாண மட்டத்திலாவது ‘லொக்டவுன்’ அவசியம்!

Politics 2 ஆண்டுகள் முன்

banner

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. எனவே, முழு நாட்டையும் முடக்க முடியாவிட்டால் குறைந்தபட்சம் மாகாண மட்டத்திலாவது உடன் லொக்டவுன் நடைமுறையை பின்பற்றுமாறு அரசிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.





நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல இக்கோரிக்கையை விடுத்தார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





” ஒருபுறத்தில் எதிரணி உறுப்பினர்களை அரசியல் ரீதியில் வேட்டையாடிக்கொண்டு, மறுபுறத்தில் எதிரணியினரின் ஒத்துழைப்பு அவசியம் என அமைச்சர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயார். அது பற்றி கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும்.





கொரோனா விவகாரம் தொடர்பில் வைத்தியர்கள், துறைசார் நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெற்று அரசு எடுக்கும் முடிவுகளை நாம் ஆதரிப்போம். ஆனால் அரசியலை இலக்காகக்கொண்டு எடுக்கப்படும் முடிவுகளை ஆதரிக்கமுடியாது.





நாட்டை முடக்குவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே மூன்று மாதங்களாக கதைத்துவருகின்றார். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவிவருகின்றது. முழு நாட்டையும் முடக்கமுடியாவிட்டால், மாகாண மட்டத்திலாவது வைரஸ் பரவலைத்தடுக்க அரசு எதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்.





கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதனை ஏற்கவேண்டும். இந்திய பிரதமர் மோடிகூட இதுவிடயத்தில் தோல்வி என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ” – என்றார்.