'ஐ.நா. செல்கிறது மலையகத் தமிழர் பிரச்சினை'
Politics 2 ஆண்டுகள் முன்
மலையகத் தமிழர்களின் வாழ்வியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், இருப்பவற்றை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அனைத்து வழிகளிலும் நாம் போராடுவோம். இதற்கு சர்வதேச தலையீடு அவசியமெனில் ஐ.நா. உள்ளிட்ட அதன் கிளை அமைப்புகளை நாடுவதற்கும் தயாராகவே இருக்கின்றோம் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்நாட்டில் வாழும் மலையகத் தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை திட்டமிட்ட அடிப்படையில் வஞ்சிக்கப்படுகின்றனர். சாதாரண மனிதரொருவருக்கு கட்டாயம் கிடைக்கவேண்டிய – அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்கூட எமது மக்களுக்கு காலம் கடந்தே கிடைத்தன. ஆனால் முழுமையாக கிடைக்கவில்லை.
இந்நிலைமையை மாற்றியமைத்து நல்லாட்சியின்போது குறுகிய நான்கரை வருட காலப்பகுதியில் முக்கியமான சில விடயங்களை நாம் நிறைவேற்றினோம். சமூக மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தையும் சிறப்பாக இட்டிருந்தோம். குறிப்பாக பெருந்தோட்டப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை முன்னோக்கி அழைத்துச்செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.
ஆனால் பெருந்தோட்ட மக்களை பின்நோக்கி கொண்டுசெல்வதற்கான நகர்வுகள் தற்போதைய ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய காணி உரிமையை வெளியாருக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. சிறுதோட்ட உரிமையாளர் என்ற எண்ணமும் குழிதோண்டி புதைப்பதற்கான நகர்வு இடம்பெறுகின்றது. எமது மக்களை தொடர்ந்தும் நாட் கூலிகளாக வைத்திருக்கவும், உரிமைகளை மறுப்பதற்கான வியூகமும் அரங்கேற்றப்பட்டுவருகின்றது.
எனவே, இவற்றை முறியடிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் ஐக்கிய மக்கள் சக்தியாக அனைத்து வழிகளிலும் போராடுவோம்.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததாலும், அவர்களின் இருப்பை அழிப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டதாலும், உள்நாட்டில் நீதி நிவாரணம் வழங்கப்படாததாலும் அவர்களுக்கு சர்வதேசத்தை நாட வேண்டி ஏற்பட்டது.
அதேபோல 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேசத்தை நாட வேண்டிவரும் என பேராயர் உட்பட கத்தோலிக்க சபையினர் அறிவித்துள்ளனர்.
ஆக, எமது மலையக மக்களுக்காக சர்வதேச தலையீட்டை பெறவேண்டிய நிலைமை ஏற்படுமானால் அதனை செய்வதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். ஐ.நா. உட்பட அதன் கிளை அமைப்புகளுக்கும் இப்பிரச்சினைகளை ஆதாரங்களுடன் முன்வைப்போம்.” -என்றார்.
Related Posts