விக்கியை விளாசித்தள்ளிய அங்கஜன்
Politics 2 ஆண்டுகள் முன்
எனது மக்களை வாழ வைக்க யார் பின்னால் போகவேண்டுமானாலும் அதற்கு நான் தயாராக இருக்கிறேன் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்; எனது மக்கள் வாழ உகந்த பிரதேசமாக எமது பிரதேசத்தை மாற்ற வேண்டும்.
எனது மக்களின் அடிப்படைத் தேவைகள், பொருளாதார அபிவிருத்தி, கல்வி வளர்ச்சி இவை அனைத்தினையும் முன்னெடுக்க யார் வழிகாட்டியாக இருந்தாலும் அவர்களின் பின்னால் நான் எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் செல்வேன். என் மக்கள் வாழ வேண்டும். அதுவே என் பிரதான நோக்கம். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச மாட்டேன். முதலில் மக்களின் அன்றாடப் பிரச்சினையைத் தீர்த்து அதன் பின்னரே நீண்ட காலப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும். யார் பின்னால் நின்று மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமோ அவர்களின் பின்னால் நின்று மக்களுக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
நாமல் ராஜபக்ச மலசலகூடம் சென்றால்கூட அங்கேயும் பின்னாலேயே அங்கஜன் சென்றுவிடுவார் என விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அங்கஜன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Related Posts