வடக்கில் வன்முறைகள் தலைதூக்க காரணம் என்ன?

banner

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்று பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.





வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் யாழ். மறைமாவட்ட ஆயரை இன்று மாலை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலின் பின் ஊடகங்களிடம் ஆயர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.





அவர் மேலும் தெரிவித்ததாவது:-





"தற்போதைய பொலிஸ்மா அதிபர் எஸ்.எஸ்.பியாக, டி.ஐ.ஜியாக கடமையாற்றி இருந்த ஒருவர். அவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர். இங்குள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய வருகை தந்துள்ள அவர் என்னையும் சந்தித்துள்ளார்.





வடக்கில் இளையோர்கள் வேலைவாய்ப்பில்லாத விரக்தி நிலை காரணமாகவே இங்கு போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகி வருகின்றனர்.





அதேபோல் பொலிஸார் மக்களுடன் கூடுதலாகப் பழகவேண்டும். மக்களுக்குச் சேவை செய்யத்தான் பொலிஸார் உள்ளனர். இவர்கள் இராணுவத்தினர் அல்லர். எனவே, மக்களுடன் பொலிஸார் நல்ல உறவைப் பேண வேண்டும்.





முன்னைய காலத்தில் வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டன. அதனை மீண்டும் பாடசாலைகளில் ஆரம்பிக்குமாறு நான் கூறி இருக்கின்றேன்.





அதாவது ஆரம்பிப்பதோடு மாத்திரமல்லாமல் விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.





அத்தோடு இளையோர்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாகவே வடக்கில் வாள்வெட்டுச் சம்பவங்கள், திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.





வேலையில்லாமல் இருப்பவர்களுக்குக் காசு தேவைப்படும்போதுதான் அவர்கள் திருடுவதற்குத் தூண்டப்படுகின்றனர்.





மக்களுக்காகத்தான் பொலிஸார். ஆகவே, பொலிஸார் அதிகளவில் மக்களுடன் தொடர்பைப் பேண வேண்டும்.





குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தண்டப்பணம் விதிப்பதை விடுத்து அவர்களை ஒரு மணிநேரம் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம்தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும்.





அதனைச் செயற்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.





தமிழ் பொலிஸார் எமக்குக் கடமைக்குத் தேவையாக உள்ளது. ஏற்கனவே 500 பேர் மாத்திரமே கடமையாற்றி வருகின்றார்கள்.





மேலதிகமாக தமிழ்ப் பொலிஸார் நமக்குத் தேவையாக உள்ளார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஏனெனில் வடக்கில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்று பயிற்சி பெறுவதற்குப் பலர் விரும்பவில்லை.





இந்நிலையில், வடக்கிலிருந்து பொலிஸுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு மொழிப்பயிற்சியும் வழங்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் என்னிடம் கூறினார்" - என்றார்.