'ரணில் துரோகி - ராஜபக்சக்களின் காவலன்'
Politics 1 வருடம் முன்
" மக்களுக்கு துரோகம் இழைத்து, பதவிகளுக்காக பின்செல்லும் தலைவர்களுக்கு வரலாற்றில் ஒருபோதும் இடம் கிடைக்காது. ராஜபக்ச - ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை ஏற்கவே முடியாது."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் வீடு செல்ல வேண்டும், அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அதற்கு இடமளிக்காமல் அவர்களை பாதுகாத்து ஆட்சி அமைக்க முற்படுவது மக்கள் விரோதச்செயலாகும். இவர்களுடன் இணைந்து ஆட்சி அமைந்தமை மக்களுக்கு இழைத்த துரோகமாகும். எனவே, தற்போது 'ரணில்கோ' கிராமமும் உருவாகிவிட்டது.
மக்கள் பக்கம் நின்றே முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக மக்களுக்கு துரோகம் இழைக்கும் தலைவர்களுக்கு வரலாற்றில் இடம் கிடைக்காது. ரணில் விக்கிரசிங்கம் குறித்து, ஜனாதிபதி எமக்கு பாடம் எடுக்கவேண்டியதில்லை. அவருடன் முடியாது என்பதால்தான் நாம் புதிய கட்சியை உருவாக்கினோம். அதனை மக்கள் அங்கீகரித்தனர். பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை.
பின்கதவால் நாடாளுமன்றம் வந்த ஒருவரை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முற்படுவது நகைச்சுவையான விடயமாகும். உலகம் ஏற்காது. நிலையான அரசு உருவாகும்வரை, சர்வதேச உதவிகள் கிடைக்காது. இதனை புரிந்துகொள்ள வேண்டும். கௌரவமாக வெளியேறுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கிய வாய்ப்பை அவர் பயன்படுத்த தவறியுள்ளார். " - என்றார்.
Related Posts