காலி முகத்திடல் நினைவேந்தலுக்கு ஈபிடிபியும் ஆதரவு
காலிமுகத்திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு என்னுடைய மரியாதையைப் பதிவு செய்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இலங்கை - இந்திய ஒப்பந்த நடைமுறைகளை சரியான திசைவழி நோக்கி நகர்த்தி செல்லும் உரிமை எமக்கு அன்று வன்முறை செயற்பாடுகளால் மறுக்கப்பட்டிருந்தாலும் அந்த ஒப்பந்த நடைமுறைகளில் நாம் பங்கெடுக்காது போயிருந்தாலும், அன்றிலிருந்து வன்முறை வழிமுறையின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியாது என்பதை எமது கட்டாய கட்டளைகளாக நாம் ஏற்றுக்கொண்டவர்கள். சாதாரண மக்களின் உணர்வுகளை நான் என்றும் மதிப்பவன்.
அமைதி வழியில் போராடும் சுதந்திரம் எவருக்கும் உண்டு. ஆனாலும் வன்முறைகள் எந்த வடிவத்தில் யாரால் முன்னெடுக்கப்பட்டாலும் அவைகள் குறித்து நான் விமர்சனங்களை முன்வைப்பவன்.
அண்மையில் நடந்த வன்முறைகளின் போது கொல்லப்பட்ட சிங்கள சகோதர மனித உயிர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். தாக்கப்பட்டு, காயப்பட்டு, உடமைகளை இழந்தும் இருப்போருக்கும் ஆறுதல் கூறுகின்றேன்.
இதேவேளை, எமது மக்களின் நீதியான உரிமைப்போராட்டத்தில் தகுதியான அனைத்து விடுதலை இயக்க போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்றேன்.
தமிழ் மக்களின் உரிமைப் போரின் பெயரால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின் போதும், மாறி மாறி நடந்த இனக் கலவரங்களின் போதும் மரணித்த அனைத்து உயிர்களையும் நினைவு கூருகின்றேன்.
யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமது மக்களின் ஜனநாயக உரிமை. அதை நான் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனாலும் இறந்த மனித உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்று கூறிக்கொண்டு, எமது மக்களின் அழிவுகளை வைத்து அதில் அரசியல் பிழைப்பு நடத்துவதை நான் ஒரு போதும் ஏற்கபோவதில்லை.
யுத்தத்தில் இறந்த சகல மக்களையும் நினைவு கூருவதற்கும் அவர்களின் மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை 2016 ஆம் ஆண்டு இந்த உயரிய சபையில் தனிநபர் பிரேரணையாக நான் கொண்டு வந்திருந்தேன்.
துரதிஷ்டவசமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது ஓடி ஒளித்துவிட்டார்கள். ஆனால் அதிஷ்டவசமாக தென்னிலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநபர் பிரேரணையை நிறைவேற்றித்தந்திருந்தார்கள்.
அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், என்னுடைய அந்த விருப்பத்தினை பிரதிபலிக்கும் வகையில், இறுதி யுத்தத்தில் சகல மக்களையும் சகல மக்களும் நினைவுகூரும் வகையில் காலிமுகத் திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கும் என்னுடைய மரியாதையைப் பதிவு செய்கின்றேன்.
அழிவு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கண்ணீருக்கும் பரிகாரம் தேடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Related Posts