'பிரபுத்துவ அரசியலை எதிர்த்தவர் பிரபாகரன்' - டலஸ் (காணொளி)

Politics 1 வருடம் முன்

banner

" பிரபுத்துவ அரசியலை எதிர்த்து நிற்பது பெரும் சவால். எனது உயிரை பணயம் வைத்தே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.





தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான '360' அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.





அவர் மேலும் கூறியவை வருமாறு,





" 2005 ஜனாதிபதி தேர்தலின்போது, ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட ரீதியில் அவமானப்படுத்தும் விதத்தில் 'போஸ்டர்கள்' வடிவமைக்கப்பட்டிருந்தன. முதலாவது போஸ்டர் 'மைக்கல் ஜெக்சன்' போல் ஆடை அணிவிக்கப்பட்டது, 2 ஆவது போஸ்டரில் பராக்கிரமபாகு மன்னரின் படத்துக்கு, ரணிலின் தலை பொருத்தப்பட்டது.





தேர்தல் பிரச்சார நடவடிக்கையை நான் பொறுப்பேற்றபோது, இந்த போஸ்டர்களை நிராகரித்தேன். ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட ரீதியில் அவமதிக்கும் வகையிலான 40 ஆயிரம் போஸ்ட்டர்களை எரிக்க நடவடிக்கை எடுத்தேன். இது மஹிந்த ராஜபக்சவுக்கும் தெரியும்.





1994 முதல் 2019 வரை ரணில் விக்கிரமசிங்கதான் எமது அணியின் அரசியல் எதிரி. ஆனால் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பின்போது அவரை ஆதரிப்பதற்கு கட்சி (மொட்டு கட்சி) முடிவெடுத்தது. அது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.





எனது அரசியல் வாழ்வில் ரணில் விக்கிரமசிங்கவை நான் தனிப்பட்ட ரீதியில் தாக்கி பேசியது கிடையாது. மத்திய வங்கி கொள்ளை, பட்டலந்த விவகாரம் பற்றி விமர்சித்ததும் கிடையாது. இது ரணிலுக்கும் தெரியும்.





நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்வில் வெற்றிபெறுவதற்கு IMF ஐகூட விஞ்சும் விதத்தில் நகர்வுகள் (பணபறிமாற்றம்) முன்னெடுக்கப்பட்டன. அவை என்றாவது வெளிச்சத்துக்கு வரும்.





டலஸ் அழகப்பெருமவுக்கு எதிராக ஜயவர்தன மற்றும் ராஜபக்ச குடும்பம் ஒன்றிணைந்தது.





நாட்டில் பிரபுத்துவம் அற்ற அரசியலுக்காக முன் நின்றவர்கள்தான் விஜேகுமாரதுங்க, ரோஹன விஜேவீர, ரணசிங்க பிரேமதாச, வேலுபிள்ளை பிரபாகரன் ஆகியோர். இறுதியில் என்ன நடந்தது? நால்வரும் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை நான் நியாயப்படுத்த முற்படவில்லை. (இந்த பகுதியை மட்டும் பிரசாரம் செய்து, தவறான கருத்தை முன்னெடுத்துவிட வேண்டாம்)





பிரபுத்துவ அரசியலை எதிர்ப்பது எவ்வளவு பெரிய சவால் என்பதை புரிந்துகொண்டேன். எனது உயிரை பணயம் வைத்துதான் சவாலை ஏற்றேன். எனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகின்றது."





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேற்படி தகவல்களை வெளியிட்டார்.





தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான '360' அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.






https://www.youtube.com/watch?v=Ux1WjOJhTMg