இலங்கைக்குத் தீங்கு விளைவிக்காது சீனா
Politics 1 வருடம் முன்
"இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தச் செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மையான மற்றும் நம்பகமான நண்பராக இருப்போம்."
-இவ்வாறு உறுதியளித்துள்ளது சீனா.
சீன அரசவை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கம்போடியாவில் சந்தித்துப் பேசினர்.
இதன்போது, சீன அரசும் மக்களும் இலங்கைக்கு அவசரகால மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகள் மூலம் தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக சீன வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் புதிய அரசு, நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு செல்லும் என்று சீனா நம்புவதாகவும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனாவின் கொள்கையில் இலங்கை உறுதியாக இருக்கின்றது என்றும், சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் மற்றும் பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலையும் இலங்கை எதிர்க்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் சீனாவின் 'கடன் பொறி' என்று கூறப்படும் கூற்றை மறுத்த அலி சப்ரி, இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 10 சதவீதத்தை மட்டுமே சீனா கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
சீனாவின் உதவி இல்லாமல் இலங்கை எந்த வளர்ச்சியையும் அடைந்திருக்காது என்றும் அவர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.
Related Posts