ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் கார்க் தீவு மீது அமெரிக்கா சரமாரியாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு, ஈரானின் எண்ணை முனையமாக செயல்படுகிறது.அங்கு பெட்ரோலிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்த தீவு கையாளுகிறது. மேலும் அந்நாட்டின் எரிசக்தித் துறைக்கு ஒரு மிக முக்கிய மையமாகவும் இது திகழ்கிறது.
ஈரானுக்கு முக்கியம் வாய்ந்த அந்த தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்குள்ள ராணுவ உள் கட்டமைப்புகள், கடற்படை தளம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை அழித்து உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியதாவது,
" அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது.
ஈரானின் மகுடமாகத் திகழும் கார்க் தீவில் அனைத்து ராணுவ இலக்குகளையும் அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்துள்ளது.
மனிதநேயம் மற்றும் கண்ணியம் கருதி அந்த தீவில் உள்ள எண்ணை உள்கட்டமைப்புகளை அழிக்காமல் விட்டுவிட நான் முடிவெடுத்துள்ளேன்.
ஆனால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு ஈரானோ அல்லது வேறு எவரேனும் இடையூறு செய்தால், எனது இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வேன்.
நாங்கள் தாக்க விரும்பும் எந்தவொரு இலக்கையும் தற்காத்துக்கொள்ளும் திறன் ஈரானிடம் துளியும் இல்லை. ஈரானின் ராணுவமும், இந்தத் தீவிரவாத ஆட்சியுடன் தொடர்புடைய மற்ற அனைவரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமாகும் " என்று டிரம்ப் கூறி உள்ளார்.
ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க விமானங்கள் சேதம்!
அதேவேளை, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப் படைதளம் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதில் அமெரிக்க விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளன. மொத்தம் 5 விமானங்கள் சேதம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேவேளையில் விமானங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் அவை பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.