ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு காவல்துறை அதிகாரிகளைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய டெசி ப்ரீமேன் என்பவருக்கு உதவியவர்களைக் கண்டறிய, விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் காவல்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தப் புலனாய்வின் ஒரு பகுதியாக ஏழு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்டோரியா மாநில பொலிஸார் நேற்று காலை 6:30 மணிக்கு Buckland , Stanley மற்றும் Lucyvale ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று கிராமப்புற சொத்துக்களைச் சோதனையிட்டனர்.
அதே நேரத்தில், நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில பொலிஸார் தெற்கு டேபிள்லேண்ட்ஸ் பகுதியிலுள்ள Greenwich Park , Tarlo , Wombeyan Caves) மற்றும் தெற்கு கடற்கரையில் உள்ள Umina Beach ஆகிய இடங்களில் உள்ள நான்கு வீடுகளில் சோதனை வாரண்டுகளை நிறைவேற்றினர்.
குறிப்பிட்ட அந்த சொத்துக்களில் பொலிஸார் இன்னும் சோதனைகளை மேற்கொண்டு வருவதுடன், இதுவரை பல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சோதனைகளைத் தொடர்ந்து, லூசிவேல் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் வோடொங்கா (Wodonga) நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.
மேலும், வோம்பேயன் கேவ்ஸ் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மற்றொரு நபர், இந்த விவகாரத்துடன் தொடர்பில்லாத பிற பிடியாணைகளின் (Outstanding warrants) அடிப்படையில் கிரீன்விச் பார்க் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து 'டாஸ்க்போர்ஸ் சமிட்' (Taskforce Summit) பிரிவின் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் அந்தோனி காஸ்பரினி (Anthony Gasparini) கூறுகையில்:
"பிரீமேன் உயிரோடு இருந்திருந்தால், அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் செல்வதற்கும், அடுத்தடுத்த மாதங்களில் தலைமறைவாக வாழ்வதற்கும் ஒரு பெரிய தரப்பின் ஆதரவு தேவைப்பட்டிருக்கும் என்பதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம்."
"அந்த வகையில், தேடப்பட்டு வந்த ஒரு தப்பியோடிய குற்றவாளிக்கு தஞ்சம் அளித்து ஆதரவு வழங்கிய மற்றும் தாங்களாகவே கடுமையான குற்றங்களைச் செய்திருக்கக்கூடிய நபர்களை அடையாளம் கண்டு, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே எங்களது நோக்கமாகும்."
"இன்று வாரண்டுகள் மூலம் சோதனைகள் நடத்தப்பட்ட பகுதிகள் உட்பட, பிரீமேன் இறப்பதற்கு முந்தைய 7 மாத கால நடமாட்டங்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எங்களுடன் பேசுமாறு கேட்டுக்கொள்கிறோம்."
"பொலிஸாரிடம் பேச அல்லது தகவல் வழங்க முன்வருபவர்கள் யாராக இருந்தாலும், தங்களது விபரங்களை 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (Crime Stoppers) மூலம் மிகவும் ரகசியமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்றார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி போரேபுன்காவில் பணியில் இருந்த இரண்டு பொலிஸாரை பிரீமேன் சுட்டுக் கொன்றதன் பின்னர், அவனது நடமாட்டங்களை ஆராய்ந்து வரும் 'டாஸ்க்போர்ஸ் சமிட்' விசேட புலனாய்வின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனை வாரண்டுகள் செயல்படுத்தப்பட்டன.
ரேனர் ட்ராக் (Rayner Track) பகுதியில் உள்ள ஒரு சொத்தில் ஏற்பட்ட மோதலின் போது, டிடெக்டிவ் லீடிங் சீனியர் கான்ஸ்டபிள் நீல் தாம்சன் (Neal Thompson) மற்றும் சீனியர் கான்ஸ்டபிள் வாடிம் டி வார்ட்-ஹோட்டார்ட் (Vadim de Waart-Hottart) ஆகியோர் 56 வயதுடைய பிரீமேனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்போது, உடலின் கீழ் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான மூன்றாவது அதிகாரியும் பலத்த காயமடைந்தார்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பிரீமேன் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடினார், மேலும் விரிவான தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்ட போதிலும் அவர் 7 மாதங்களாகப் பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.
கடந்த மார்ச் 30 ஆம் திகதி தொலோகலாங் (Thologolong) பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற சொத்தில் வைத்து அந்தப் பயங்கரவாதியை பொலிஸார் சுற்றி வளைத்தனர், அங்கு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"போரேபுன்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கும், இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பிற பொலிஸ் உறுப்பினர்களுக்கும் நாங்கள் தகுந்த பதில்களை வழங்குவது மிகவும் முக்கியம்" என்று காஸ்பரினி கூறினார்.
"பல மாதங்களாகப் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த போரேபுன்கா சமூகத்தையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், அத்துடன் மரண விசாரணை (Coronial investigation) அறிக்கையின் ஒரு பகுதியாக முழுமையான பதிலை வழங்க வேண்டும்."
"இதன் ஒரு பகுதியாகவே, துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு பிரீமேனின் நடமாட்டங்கள் என்னவாக இருந்தன மற்றும் தொலோகலாங்கில் அவர் இறுதியாகக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு யாரெல்லாம் உதவினார்கள் என்பதைத் தீர்மானிக்கும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.