இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கன்பராவில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ்,
"2015 இந்தியா - ஆஸ்திரேலியா அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ், அமைதிப் பயன்பாட்டிற்காக இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான நிர்வாக ஏற்பாட்டில் (administrative arrangement) இன்று நாங்கள் கையெழுத்திட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய யுரேனியத்தை ஏற்றுமதி செய்வதை எளிதாக்குவதுடன், இந்தியாவின் புதைபடிவமற்ற எரிசக்தி திறனை அதிகரிக்க உதவும் என்றும், ஆஸ்திரேலிய வளத் துறைக்கு கூடுதல் சந்தையை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு வணிக ரீதியாக யுரேனியம் ஏற்றுமதி செய்ய அனுமதித்த போதிலும், இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை காரணமாக, ஆஸ்திரேலியாவின் அணுசக்தி பாதுகாப்பு விதிகளின்படி அமைதிப் பயன்பாடுகளுக்கு மட்டுமே யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிபந்தனை இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை ஒரு 'உயர்மட்ட' (top-tier) பாதுகாப்பு பங்காளியாகக் குறிப்பிட்ட பிரதமர் அல்பானீஸ், அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இரு நாடுகளின் கூட்டுப் பார்வையைப் பிரதிபலிக்கும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் பாதுகாப்புச் சேவைகளை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இரு நாடுகளின் கலாச்சார நிறுவனங்களில் உள்ள தொல்பொருட்களை மீண்டும் சொந்த நாட்டிற்கு கொண்டு வருவது ஆகியவையும் அடங்கும்.
விண்வெளித் துறை ஒத்துழைப்பு
இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு (Human Space Flight program) ஆதரவாக, கோகோஸ் கீலிங் தீவுகளில் (Cocos Keeling Islands) தற்காலிக விண்வெளி கண்காணிப்பு முனையம் (space-tracking terminal) அமைக்கப்படும் என்று அல்பானீஸ் அறிவித்தார்.
இத்திட்டம் 2027ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செரெஸ் திட்டம் (Project Ceres)
ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கத்தால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள, மேற்கு ஆஸ்திரேலியாவின் கர்ராதாவில் நைட்ரஜன் அடிப்படையிலான உரங்களைத் தயாரிக்கும் 'செரெஸ் திட்டத்திற்கு' நிரந்தர முக்கிய திட்ட அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும்.
மெல்போர்னில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
ஆஸ்திரேலியா-இந்தியா வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக புதன்கிழமை ஆஸ்திரேலியா வந்தடைந்த பிரதமர் மோடி, மூன்று நாட்கள் தங்கியிருப்பார்.
வியாழக்கிழமை இரவு மெல்போர்னின் டாக்lands ஸ்டேடியத்தில் (Docklands Stadium) நடைபெறவுள்ள பிரம்மாண்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.