மெல்போர்னின் கிழக்கு பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னையும், தனது தோழியையும் கடத்த முயன்ற பயங்கரமான தருணத்தை நாய் வளர்ப்பாளர் ஒருவர் விவரித்துள்ளார்.
கிளென் ஐரிஸ் (Glen Iris) பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் மற்றும் டூராக் (Toorak) பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஆகிய இருவரும், கூயோங் (Kooyong) பகுதியில் உள்ள கார்டினர்ஸ் கிரீக் (Gardiners Creek) ஆற்றங்கரையில் அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, புதர்களுக்குள் ஒரு நபர் ஒளிந்திருப்பதை அவதானித்துள்ளனர்.
"அந்த நொடியில் அவர் எனது தோழியை நோக்கி பாய்ந்து, அவரது கழுத்து மற்றும் தோள்பட்டைப் பகுதியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார்" என பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் ஊடகத்திற்குத் தெரிவித்தார்.
"பின்னர் அவர் என்னை நோக்கி நடந்து வந்து, என்னை அச்சுறுத்தி அங்கிருந்த சுரங்கப்பாதைக்குள் இழுத்துச் செல்ல முயன்றார். என்னுடன் தவறாக நடக்க வேண்டும் என்றும் கூறினார்."
கிளென்பெரி வீதிக்கு (Glenferrie Road) அருகிலுள்ள பூங்காவில் இந்த சம்பவம் நடந்தபோது, அந்தப் பெண்கள் தங்களது 11 வளர்ப்பு நாய்களுடன் அங்கு உலா வந்துகொண்டிருந்தனர்.
பெண்கள் அச்சத்தில் உறைந்திருந்த நேரத்தில், அங்கிருந்த நாய்கள் அந்த நபரை நோக்கி பாய்ந்து துரத்தியுள்ளன.
இதனால் பயந்துபோன அந்த நபர், மொனாஷ் அதிவேக நெடுஞ்சாலைக்கு (Monash Freeway) அடியில் உள்ள சுரங்கப்பாதையை நோக்கி ஓடி தப்பியோடியுள்ளார். இதற்கிடையில், பெண்களில் ஒருவர் அந்த நபரின் ஆடையின் ஒரு பகுதியை கிழித்து வைத்துள்ளார்.
"என்ன நடக்குமோ என்று பல சிந்தனைகள் என் மனதில் ஓடினாலும், பயப்படுவதை விட அந்தச் சூழலில் இருந்து தப்பிக்கவே நான் உடனடியாக முயன்றேன்," என்று அந்த பெண் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் கணினி மூலம் வரையப்பட்ட மாதிரி வரைபடத்தை (Composite image) காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் ஆப்பிரிக்க தோற்றமுடையவர் என்றும், அவர் கருப்பு நிற டிராக்சூட் பேண்ட், வெள்ளை நிற காலுறைகள், செருப்பு, கருப்பு மற்றும் சாம்பல் நிற தொப்பி போட்ட சட்டை (Hoodie) மற்றும் கருப்பு நிற முகமூடி அணிந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ஒரு பெரிய பிரகாசமான நீல நிற முதுகுப்பையையும் (Backpack) சுமந்து சென்றிருந்தார்.
பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது" என உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் அந்த பூங்காவிற்குச் செல்ல சற்று தயங்கினாலும், இந்த சம்பவத்தால் தங்களது பணியை நிறுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.
"நான் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணாக நான் எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பேன். அதற்காக நான் விரும்பும் இந்த பூங்காவிற்கு வருவதை நிறுத்தப் போவதில்லை" என்று அந்தப் பெண் கூறினார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.