" தமிழ் டயஸ்போராக்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது. இதன்அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்சவுக்குரிய பாதுகாப்புகூட தற்போது குறைக்கப்பட்டுள்ளது."- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்குரிய சூழ்ச்சி திட்டம் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அளித்து வந்த 116 பாதுகாவலர்கள் ஒரே தடவையில் நீக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மீளாய்வின்றியே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதுகாப்பு நீக்கப்பட்டதன் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதா என்ற சந்தேகமும் எமக்கு உள்ளது. உணவு பரிசோதகர்கள்கூட நீக்கப்பட்டுள்ளனர். உலகில் உணவில் விஷம் கலந்து தலைவர்களை கொலை செய்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் உணவு பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் உடன் நீக்கப்பட்டது எவரின் தேவைக்காக என அரசாங்கத்தை கேட்கின்றோம்.
20 வருடகாலமாக மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்கிவந்த அதிகாரிகள்கூட நீக்கப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்சவை பாதுகாத்துவந்த அதிகாரிகள்கூட தற்போது பழிவாங்கப்படுகின்றனர்.
கனடாவில் இருந்து செயற்படும் தமிழ் டயஸ்போராக்களின் அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றிவருகின்றது. வடக்க, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன. மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்படுகின்றது. இது டயஸ் போராக்களின் தேவைக்காக நடக்கின்றது. மஹிந்த ராஜபக்சவை கொல்வதற்குரிய களம் அமைத்துக்கொடுக்கப்படுகின்றதா? மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அவசியம். எனவே, பாதுகாப்பை குறைக்கும் திட்டத்தை இந்த அரசாங்கம் மீளப்பெற வேண்டும். " -என்றார்.