தேசிய இன விவகார ஆணைக்குழுவுக்கு பொறுப்பான அமைச்சர் பான் யூ தலைமையிலான சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள மேற்படி தூதுக்குழு 23 ஆம் திகதிவரை நாட்டில் தங்கி இருந்து, முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளது.
இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பிலேயே இலங்கை தரப்புகளுடன், மேற்படி குழு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீன ஜனாதிபதியின் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினரான பான் யூ, சீனாவில் சிறுபான்மையினத்தவர்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாண்டுவருகின்றார்.
இவரின் முக்கியத்துவம்கருதி கடந்த வருடம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு உள்வாங்கப்பட்டார்.
இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தேசிய மக்கள் சக்தியின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வடபகுதியிலும் காலூன்றுவதற்கு சீனா தீவிரம் காட்டிவருகின்றது. இதற்காக தொடர்ச்சியாக வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது. இன்றுகூட வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண பங்கீட்டில் சீனா ஈடுபட்டுவந்தது.
இலங்கையில் பொருளாதார விவகாரங்களில் இந்தியாவுடன் சீனா போட்டியிட்டுவருகின்றது. எனினும், இனப்பிரச்சினை விவகாரம் மற்றும் நல்லிணக்க விடயத்தில் டில்லியின் பங்களிப்பே கூடுதாக இருந்துவருகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நல்லிணக்க விடயத்திலும் சீனா மூக்கை நுழைக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.