யாழ். திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தி, அது உடைக்கப்படும் எனக்கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிதரன் ஆகியோர் இனவாதத்தை தூண்டியுள்ளனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தினார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில் இன்று இனவாதத்தை பரப்புவது யார்? தேவநம்பிய திஸ்ஸ காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன்னால் வந்து சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் போராட்டம் நடத்துகின்றனர்.
அதுமட்டுமல்ல விகாரை இடிக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.இது இனவாதத்தை தூண்டும் செயல் இல்லையா? அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை என்ன?
விகாரை இடிக்கப்படும் எனக் கூறிய கஜேந்திரகுமார் இனவாதியா, முடிந்தால் செய்யுங்கள் எனக்கூறிய நாம் இனவாதியா என ஜனாதிபதியிடம் கேட்கின்றோம்.
யாழ்ப்பாணத்துக்கு சென்று, மக்களை அரவணைத்துக்கொண்டு இனவாதத்தை இடமில்லை என ஜனாதிபதி அறிவிப்பு விடுத்தார். ஆனால் கஜேந்திரகுமார் இன்று இனவாதத்தை தூண்டுகின்றார்.
அதேபோல யாழ்.பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, கறுப்பு கொடி ஏற்றியுள்ளனர். இது இனவாத செயல் அல்லவா? இவற்றுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை என்ன? இனவாதம் இவ்வாறு முன்னோக்கி சென்றால் நாட்டில் இன மோதல் ஏற்படக்கூடும். அது தேசிய பாதுகாப்பிலும் தாக்கம் செலுத்தும்.
எனவே, இனவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்துக்கு நெருக்கடியில் சிக்க வேண்டிவரும்." - என்றார்.