இலஞ்ச, ஊழல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முற்பகல் 9.15 மணியளவில் மேற்படி ஆணைக்குழுவுக்கு தமது சட்டத்தரணிகள் சகிதம் வந்த ரணில், நண்பகல் 12.15 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
2016 ஆம் ஆண்டு, ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க பதவி வகித்தபோது, பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டார் என முறைப்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
சாமர சம்பவத் தசநாயக்க கைது செய்யப்பட்ட பிறகு அது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
அது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இலஞ்ச, ஊழல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
இரு தடவைகள் கால அவகாசம் கேட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று ஆணைக்குழு முன் ஆஜராகி, வாக்குமூலம் வழங்கினார்.
அதன்பின்னர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, அங்கு நடந்தவற்றை தெளிவுபடுத்தினார்.