ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை இனவாத கோணத்தில் விமர்சித்து அசிங்கமான அரசியலை நடத்துவதற்கு நாம் தயாரில்லை – என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மாற்றமொன்றை விரும்பும்வேளையில் வடக்கு மக்களும் அதன் பங்காளிகளாக வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாட்டுக்கு வந்திருந்தவேளை எம்முடனும் பேச்சு நடத்தினார். இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
எமக்கு பிராந்திய பாதுகாப்பு முக்கியம். எனவே, இலங்கையின்; பூமி, வான் மற்றும் கடற்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்ற தீர்மானத்தில் இருக்கின்றோம். இந்தியா சென்றிருந்தவேளை வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின்போதும் இது பற்றி கூறப்பட்டது. அரசியல் காரணங்கள் பற்றி பேசப்படவில்லை.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் விஜயத்துக்கும், தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கும் இடையில் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் சமூகத்தில் உள்ளது. அது பற்றி எதிர்காலத்தில் தெரியவரும்.
தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் எமக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் அதனை இனவாத கோணத்தில் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. எவரும் அவ்வாறு செய்யவும் கூடாது. இனவாத அரசியலென்பது 2022 ஆம் ஆண்டுடன் முடிக்கப்பட்டுவிட்டது.
இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின்போது ராஜபக்ச முகாமுக்கு எதிராகவே வடக்கு மக்கள் தீர்மானம் எடுத்தனர். ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிடுபவர்களுக்கு மக்கள் வாக்களித்தனர்.2010 சேனாதிபதியும், இராணுவத் தளபதியும் போட்டியிட்டனர். வடக்கு மக்கள் இராணுவத் தளபதிக்கே வாக்களித்தனர்.
மஹிந்த தரப்புக்கு எதிரான மனோ நிலை மக்களிடம் இருந்தது. அப்போது தமிழரசுக் கட்சி உட்பட தமிழ்க் கட்சிகளுக்கு மக்கள் பக்கம் நின்று தீர்மானங்களை எடுக்க நேரிட்டது.
ஆனால் அவரை தோற்கடிக்க வேண்டும், இவரை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலை தற்போது வடக்கில் காணப்படவில்லை. அவ்வாறானதொரு மனோ நிலையில் மக்கள் மத்தியில் இல்லாதபோது ஏன் இவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டது என்ற சந்தேகம் சமூகத்தில் உள்ளது.
எது எப்படி இருந்தாலும் இதனை இனவாத பிரசாரத்துக்காக நாம் பயன்படுத்தபோவதில்லை. 2015 ஜனாதிபதி தேர்தலின்போது மைத்திரிக்கும், தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என போலி ஆவணத்தை திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டார். அதனை வைத்தே பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
இறுதியில் திஸ்ஸ சிறைக்கும் சென்றார்.அப்படியான அசிங்கமான அரசியலில் நாம் ஈடுபடமாட்டோம்.
.” – என்றார்.