“ ஆட்சியாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தால் புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெறக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தங்கள் தொடர்கின்றன. எனவே, புலிகள் அமைப்பு வடக்கு, கிழக்கில் மீள தலைதூக்குவதற்குரிய சாத்தியம் உள்ளதா என தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த பொன்சேகா,
“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் வாக்கு வேட்டைக்காக, தனி இராஜ்ஜியம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை இன்றளவிலும் வழங்கிவருகின்றனர். சுயநிர்ணய உரிமை பற்றி கதைக்கின்றனர்.
அப்படியான விஷக்கிருமிகள் இருக்கும் நிலையில், நாட்டில் பலவீனமான தலைவர் உருவாகி, நாடு பலவீனமாகி, வீழ்ச்சியடைந்தால் நிச்சயம் அப்படியான பிரச்சினைகள் எழுவதற்குரிய சாத்தியம் உள்ளது.” – என்றார்.
படை குறைப்பு தொடர்பில் மேற்படி ஊடகம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு,
“ எமது நாட்டு தேசிய பாதுகாப்பு என்பது ஐஎம்எப்பின் பொறுப்பு அல்ல. அது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.படை குறைப்பு யோசனையுடன் உடன்பட முடியாது.” – என்று பொன்சேகா திட்டவட்டமாக அறிவித்தார்.
கனடா இனவழிப்பு நினைவகம் பற்றியும் பொன்சேகாவிடம் வினவப்பட்டது.
“ சில தமிழ் டயஸ்போராக்கள் விசாவுக்காகவும், தமது வியாபாரத்தை விஸ்தரித்துக்கொள்வதற்காகவும் இலங்கையில் கொடூமைகள், சித்திரவதைகள் நடப்பதாகக் கூறிவருகின்றனர். தாம் இலங்கைக்கு சென்றால் இன்னல்களை சந்திக்க நேரிடும் எனக்கூறி அதற்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தற்போதைய அரசாங்கம்போலவே கடந்தகால அரசாங்கங்களும் நிராகரித்துள்ளன.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.