இலங்கையில் இனப்படுகொலை நடந்தாகக் கூறி தெற்கிலும் நிகழ்வுகள் நடத்தப்படும் நிலை உருவாகிவிட்டது. இதனை தடுக்காமல் அரசாங்கம் மௌனம் காப்பது பாரதூரமான விளைவுகளேயே ஏற்படுத்தும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
“ இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது எனக் கூறி வெள்ளவத்தையிலும், நீர்கொழும்பிலும் நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது. இவற்றை தடுப்பதற்கு அரசாங்கம் முற்படவில்லை. இந்நிலையில் இதற்கு எதிராக செயற்பட்ட சிங்கள இளைஞர் ஒருவருக்கு டுபாயில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழினப்படுகொலை நடக்கவில்லை. 2 லட்சத்து 95 ஆயிரம் பணயக் கைதிகளை மீட்டு போரை வெற்றிகொண்ட உலகில் ஒரே இராணுவம் இலங்கையில் மட்டுமே உள்ளது. இப்படியான இராணுவத்தினருக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டை முன்வைப்பது நகைப்புக்குரிய விடயமாகும்.” என மொட்டு கட்சி உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இடம்பெற்றுவந்த நினைவேந்தல் தற்போது தெற்கில் நடைபெற துவங்கியுள்ளது. இது விடயத்தில் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. இது ஏற்புடைய விடயமல்ல. வன்முறை மற்றும் பயங்கரவாதத்தக்கு இது வழிவகுக்கக்கூடும் என்பதை அரசாங்கம் புரிந்து செயற்பட வேண்டும்.”- என சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளார்.