செம்மணி புதைகுழி அகழ்வு பணிக்கு உரிய நிதி ஒதுக்கீடு அவசியம்!
" செம்மணி புதைகுழியை பாரிய மனித புதை குழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன், அகழ்வுப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவும் வேண்டும் - என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நீதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
" செம்மணியில் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய மனித புதைகுழிகள் என்று கூறும் தன்மையை அது கொண்டுள்ளது. எனினும், புதைகுழி உள்ள பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை." - எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. கூறினார்.
அத்துடன், அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கும், சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் போதுமானளவு நிதி இல்லை எனக் கூறப்படுகின்றது.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி 20 நாட்களுக்குகூட போதாதென மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி இல்லாமல்போனால் அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய அச்சம் உள்ளது.
எனவே, குறித்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும். அரசாங்கத்துக்கு தேவையேற்பட்டால் வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்றுத்தர எம்மால் உதவ முடியும். உண்மை கண்டறியப்பட வேண்டும். சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்." - என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேலும் தெரிவித்தார்.