இலங்கையில் எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் பொதுவேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் களமிறக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பா.அரியநேத்திரன் இவ்வாறு பொதுவேட்பாளராக போட்டியிட்டாலும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி அதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளது. எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தரப்பு தமிழ் பொதுவேட்பாளருக்காக களத்தில் குதித்துள்ளது.
வடக்கு, கிழக்கில் செயற்படும் மற்றுமொரு தமிழ்த் தேசியக் கட்சியான, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் பொதுவேட்பாளர் முயற்சியை கடுமையாக சாடியுள்ளது. தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் ‘எதிரொலி’க்கு வழங்கிய நேர்காணல் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
நேர்கண்டவர்: ஆர்.சனத்
கேள்வி –1982 முதல் 2019 ஆம் ஆண்டுவரை இலங்கையில் நடைபெற்றுள்ள ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்றதில்லை. அவ்வாறு வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் அரிது என்றபோதிலும் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
பதில் -இலங்கையில் 8 ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. எட்டுப் பேர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளாக பதவி வகித்துள்ளனர். அவர்கள் அனைவருமே தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றிவந்துள்ளனர்.
இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காகவே நாம் போராடிவருகின்றோம். இது தொடர்பில் அவ்வப்போது பேச்சுகள் நடத்தப்பட்டாலும் இறுதியில் ஏமாற்றமே எஞ்சும் நிலையே நீடிக்கின்றது.
எனவே, தீர்வு விடயத்தில் இனியும் ஏமாறத் தயாரில்லை என்ற செய்தியை வாக்களிப்புமூலமாக ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவாக வேண்டும் என்பது அல்ல, எமது கோரிக்கையை தெளிவாக எடுத்துக்கூற வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும்.
கேள்வி - ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்துள்ளன. இவை தொடர்பில் திருப்தி இருக்கின்றதா?
பதில் - திருப்தியடையக்கூடிய வகையில் அவற்றில் ஒன்றுமில்லை. சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையே நாம் கோருகின்றோம். அதைப்பற்றி தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் குறிப்பிடவில்லை. மாறாக அரசமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றியே குறிப்பிட்டுள்ளனர்.
’13 ’நடைமுறைப்படுத்தப்படும் என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிகாரம் தவிர ஏனையவை அமுல்படுத்தப்படும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.சஜித் பிரேமதாசவும்’ 13’ பற்றியே கதைத்துவருகின்றார்.
1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமே 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. தற்போது 37 வருடங்கள் கடந்துவிட்டன. இக்காலப்பகுதியில்கூட 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. அதாவது 37 வருடங்களாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுவந்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இம்முறையும் ’13’ பற்றி கதைக்கின்றனர்.இது தேர்தல்கால வாக்குறுதியாகக்கூட இருக்கலாம். மாறாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற இதய சுத்தியுடன் தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தீர்வுகள் முன்மொழியப்படவில்லை.
கேள்வி – தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில்கூட மாறுபட்ட கருத்துகள் உள்ளன. சிலர் இம்முயற்சியை எதிர்க்கின்றனர்.ஒரு தமிழ்த் தேசிய அரசியல்வாதி மற்றும் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் இந்தக்கேள்விக்கு உங்கள் பதில் என்ன?
பதில் -தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியென்பது கட்டாயத் தேவையாகும். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போதே நாம் இதனைச் செய்திருக்க வேண்டும். இம்முறையேனும் இது சாத்தியமானது வரவேற்கப்படக்கூடிய விடயமாகும். அந்தவகையில் இதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழ் மக்களும் இது பற்றி சாதகமான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளது.
கேள்வி - தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டத பின்னணியில் இந்தியா இருக்கின்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில் - இந்தியாவோ, சீனாவோ அல்லது அமெரிக்காவோ இதன் பின்னணியில் இல்லை. தமிப்ழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதுகூட மேற்படி நாடுகளுக்கு ஒரு கசப்பான விடயமாக இருக்கலாம். எனவே, தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தின் பின்னணியில் எந்தவொரு வெளிநாடும் இல்லை. தமிழ் மக்களுக்கான ஒன்றிணைந்த முயற்சி மாத்திரமே.
கேள்வி –தமிழ்ப் பொதுவேட்பாளர் தரப்பினர் ஜனாதிபதி ரணிலின் எடுபிடிகள் என்ற சந்தேகம் உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சிக்கு முஸ்லிம் சமூகத்தில் எத்தகையை வரவேற்பு உள்ளது?
பதில் - வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் கட்சிகள் தென்னிலங்கையில் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கின்றன. எனினும், முஸ்லிம் மக்கள் மத்தியில் எமக்கு வரவேற்பு உள்ளது. இலங்கை அரசால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும், தமிழ் மக்களின் கோரிக்கைகள் நியாயமானவை எனவும் முஸ்லிம் புத்திஜீவிகள் வலியுறுத்திவருகின்றனர். எனவே, முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
வடக்கு, கிழக்கில் வாழக்கூடிய தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் பல போராட்டங்கள் இடம்பெற்றன. தமிழ் பேசும் மக்களை அரவணைத்துக்கொண்டு பயணிப்பதே எமது நோக்கமாகும். சில முஸ்லிம் அரசியல் கட்சிகள் சலுகை அரசியலுக்காக தென்னிலங்கை வேட்பாளர்களின் பின்னால் நிற்கின்றன. சில தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வாறு உள்ளனர். முஸ்லிம் மக்கள் சிந்திக்ககூடியவர்கள் என்பதால் அவர்கள் சுதந்திரமாக தமது வாக்கைப் பயன்படுத்துவார்கள்.
கேள்வி - தென்னிலங்கை வேட்பாளர்கள்மீது நீங்கள் விசனம் வெளியிட்டாலும்கூட தமிழ்ப் பொதுவேட்பாளர் கடைசி நேரத்தில் தென்னிலங்கையில் உள்ள பிரதான வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படுமா?இல்லையேல் தமிழ்ப் பொதுவேட்பாளர் உறுதியாக இறுதிவரை போட்டியிடுவாரா?
பதில்-அவ்வாறானதொரு நிலை வராது. செப்ரெம்பர் 21 ஆம் திகதி தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு எமது மக்கள் நல்ல பாடத்தை படிப்பிப்பார்கள். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரில் ஒருவர்தான் ஜனாதிபதியாக வருவார். அவர்களுக்கும் சிறந்த செய்தியை வழங்கும் வகையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள். தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
எனவே, 9 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கப்போகும் நபராவது அவரின் காலப்பகுதிக்குள் தீர்வை வழங்க வேண்டும் என்ற தகவலையும் வழங்கிவைப்பார்கள்.
கேள்வி – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முடிவு எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில்- தமிழரசுக் கட்சியில் உள்ளவர்களும் தமிழர்கள்தானே? திருகோணமலை மாவட்டக் கிளை, கிளிநொச்சி மாவட்டக்கிளை என்பன தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 90 சதவீதமான தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் தமிழ்ப் பொதுவேட்பாளர் பின்னால் நிற்கின்றனர். தமிழரசுக் கட்சி முடிவெடுப்பதற்கு முதலே, தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் முடிவை தமிழ் மக்கள் எடுத்துவிட்டனர்.
கேள்வி - தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு குறிப்பிட்டளவு வாக்குகளைப் பெறமுடியாவிட்டால் அது தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை பலவீனப்படுத்தும் எனவும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றதே…?
பதில் - 76 வருடங்கள் ஏமாற்றப்பட்டுவந்துள்ளோம். தற்போதும்கூட பின்னடைவான நிலையில்தான் உள்ளோம். முள்ளிவாய்க்கால் படுகொலையையும் நாம் பார்த்துள்ளோம். எவ்வித முயற்சியும் இன்றி தென்னிலங்கை வேட்பாளரை ஆதரித்திருந்தால்தான் அது பின்னடைவென கருதலாம். தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியால் இனப்படுகொலையைவிட பின்னடைவு வரப்போவதில்லைதானே? எனவே, இது பற்றி யோசிக்கவேண்டியதில்லை. தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடத்தை படிப்பிக்க வேண்டும்.
கேள்வி – தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் தேசிய ரீதியில் மட்டும் அல்ல சர்வதேச மட்டத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள உங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?
பதில் -இதுவரை அவ்வாறு எவ்வித அச்சுறுத்தலும் வரவில்லை. நீங்கள் கேட்பதைப் பார்க்கும்போது அச்சுறுத்தல் வரும்போல்தான் தெரிகின்றது.
கேள்வி – தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியின்போது மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனரா?
பதில் - மலையக மக்களை நாம் ஒருபோதும் புறக்கணித்தது கிடையாது. இது விடயத்தில் மலையக மக்களுக்கும் சிறந்த புரிதல் உள்ளது. மலையகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளே திட்டமிட்ட அடிப்படையில் இப்படியான தகவல்களைப் பரப்பிவருகின்றன.
மலையக மக்களின் அரசியல் வரலாறும், எமது அரசியல் வரலாறும் அன்று முதல் இன்றுவரை பின்னிப் பிணைந்தே காணப்படுகின்றன. மலையக மக்களையும் அரவணைத்தே அரசியல் தீர்வைக் காண்பதற்கு முயற்சிக்கின்றோம். மலையகத்தில் இருந்தும் எமக்கு அழைப்புகள் வருகின்றன.
தமிழ்ப் பொதுவேட்பாளர் வடக்கு, கிழக்கை விட்டு வேறு பகுதிகளுக்கு வரக்கூடாது என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் தான் ஆதரிக்கும் தென்பகுதி வேட்பாளரும் வடக்கு, கிழக்குக்கு செல்லக்கூடாது என்பதையும் அவர் கூறினால் நன்றாக இருக்கும்.
கேள்வி – ஆஸ்திரேலியா உட்பட புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?
பதில் - 12 முதல் 15 லட்சம்வரையான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.அவர்கள் நன்கு சிந்திக்ககூடியவர்கள். அவர்களும், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு அங்கீகாரம் வழங்கி, பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. எனவே, தாயகத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் இது பற்றி தெளிவுபடுத்தி, தமிழ்ப் பொதுவேட்பாளரின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்.