அரியாலை - செம்மணிப் புதைகுழியில் நேற்று மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து, இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.
செம்மணிப் மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளின் 19ஆம் நாள் நட வடிக்கைகள் நேற்று இடம்பெற்றன.
இதன்போதே,புதிதாக மூன்று என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாவது பகுதியில் மட்டும் 23 என்புத் தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இதுவரை அடையாளம் காணப்பட்ட 88 என்புத் தொகுதிகளில் 76 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன.
நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சிரேஷ்ட சட்டத்தரணி நிறஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோர் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.