" போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா." என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
" வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலித்தலைவர்களை கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய இராணுவம் கொன்றது என ஜனாதபதி தேர்தலின்போது பொன்சேகா ஊடகமொன்றிடம் கூறி இருந்தார்.
அவரின் அந்த கதையால்தான் படையினர்மீது போர்க்குற்றச்சாட்டு சுமந்தப்பட்டு, இன்றுவரை அப்பிரச்சினை நீடிக்கின்றது. உலக வரலாற்றில் இராணுவத் தளபதியொருவர், தமது படை போர்க்குற்றம் இழைத்தது எனக் கூறிய ஒரேயொரு இராணுவத் தளபதிதான் சரத் பொன்சேகா.
போர் முடிப்பதற்கு பொன்சேகா பங்களிப்பு வழங்கினார். ஆனால் போர் முடிந்த பின்னர் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்தார். தற்போதும் அச்செயலை செய்துகொண்டுவருகின்றார்." - எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.