உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர் எதிராகவும், தனித் தனியாகவும் எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையும், பின்னர் உள்ளூராட்சி நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காக தமக்கு இடையில் இணக்கம் கண்ட பின்னர், 'கொள்கைக் கூட்டு' என்று அறிவித்த கூட்டுச் செயற்பாடு பெரும்பாலும் முடிவுக்கு வருவதாகத் தெரிகின்றது.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பின்னர் சில உதிரித் தரப்புகளையும் சேர்த்துக் கொண்டு 'தமிழ் மக்கள் பேரவை' என்று அமைப்பின் பெயரில் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொண்டது. தேர்தலின் பின்னர் வடக்கு, கிழக்கில் சில உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகங்களைக் கைப்பற்றும் எண்ணத்தோடு, தமிழ் மக்கள் பேரவை, சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் தேர்தலின் பின்னான கூட்டு ஒன்றை அமைத்தது. அது 'கொள்கைக் கூட்டு' என்று பெருத்த எடுப்பில் இரு தரப்புகளாலும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தும் விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான 'கொள்கை கூட்டு' முடிவுக்கு வருவதாகத் தெரிகின்றது.
இது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும், ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் செயலாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்த கருத்துக்கள் இந்தக் கூட்டு பெரும்பாலும் முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்துகின்றன.