இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்த புயல்!
இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்துள்ளது.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளளது. 341 பேர் காணாமல்போயுள்ளனர்.
2 ஆயிரத்து 303 வீடுகள் முழமையாகவும், 52 ஆயிரத்து 489 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
51 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் இலங்கையில் பல வீதிகள் சேதமடைந்துள்ளன. ரயில் வீதிகள், பாலங்கள், குளங்கள் மற்றும் முக்கிய கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக கொழும்பு, கண்டி ரயில் மார்க்கத்தை புனரமைப்பதற்கு ஒரு வருடகாலம் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 85 சதவீதமான குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் கட்டமைப்பை சீர்செய்வதற்குரிய பணியும் தொடர்கின்றது.
டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பல பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பல நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், மீண்டும் பொருளாதார இழப்பு ஏற்பட்டமையானது, அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.