வடக்கில் பெருமளவான மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் இருந்தனர். போர் முடிவடைந்த பின்னர் அவர்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீள்குடியமர்த்துவதற்கு மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.
“ அபாய வலயங்களில் வீடுகள் உள்ளன. அங்குள்ள மக்களை தற்காலிக இருப்பிடங்களுக்கு அனுப்ப வேண்டும். அதன்பின்னர் மாற்று காணிகள் தேடப்பட வேண்டும்.
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலப்பகுதியில் மீள் குடியமர்த்துவதற்குரிய பொறிமுறை அன்று இயங்கியது. சுனாமி அனர்த்தத்தின் பின்னரும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் இருந்து அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் தலைவர்களிடம் அனுபவங்களைப் பெற வேண்டும்.
பேரிடர் இழப்பு தொடர்பில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறியவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறு கோரியுள்ளோம். அதன்மூலம் உண்மை தெரியவரும்.
அதேபோல பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை நாம் கண்காணிப்போம். இது தொடர்பான எமது கடப்பாட்டை உரிய வகையில் நிறைவேற்றுவோம்.” எனவும் நாமல் ராஜபக்ச எம்.பி. குறிப்பிட்டார்.