ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கோப்பையை இலங்கையில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் இன்று ஆரம்பமானது.
இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இன்று (21) முதல் 24 வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் பல பிரதான நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படும்.
அத்துடன், கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது விளையாட்டு ரசிகர்கள் இந்த தங்கக் கோப்பையை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
அதன் பின்னர், கோப்பையை கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்படப்பட்டுள்ளது.
அங்கு அந்தப் பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு ரசிகர்கள் உலகக் கோப்பையுடன் நினைவுப் புகைப்படங்களை எடுக்கவும் அதைப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.
இந்த நாட்டில் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்பு அதற்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்ப்பதே இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
2012 இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளுக்குப் பிறகு இலங்கையில் நடத்தப்படும் மாபெரும் போட்டி, இந்த உலகக்கிண்ணப் போட்டியாகும்.
கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகளுக்கான அட்டவணை 2025 நவம்பர் 25 ஆம் திகதி இந்தியாவில் வெளியிடப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம், பல்லேகலே சர்வதேச மைதானம் மற்றும் கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானம் ஆகியவற்றை இலங்கையில் நடத்தப்படும் போட்டிகளுக்கான இடங்களாகத் தேர்ந்தெடுத்தது.
அதன்படி, 8 போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்திலும், 5 போட்டிகள் எஸ்.எஸ்.சி. மைதானத்திலும், 7 போட்டிகள் பல்லேகலே சர்வதேச மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இம்முறை, 20 நாடுகள் போட்டியில் பங்கேற்க உள்ளதுடன், அதில் 20 போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன. மேலும் பாகிஸ்தான் அணி போட்டியிடவுள்ள அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறும்.
அதேபோன்று, பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தால், அந்த இரண்டு போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு நடந்தால், இறுதிப் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுவதோடு, இதன் மூலம் இலங்கையில் நடைபெறும் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கும்.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிகள், நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத் துறை, விளையாட்டு மேம்பாடு, சர்வதேச விளம்பரம் மற்றும் நாடு தொடர்பில் சாதகமாக நன்மதிப்பை பெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதலாம்.