இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்குவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி, சிறிதரனுக்கு தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது.
தேர்தல் முடிந்த பின்னர், வவுனியாவில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில், நாடாளுமன்ற கொறடா பதவியை மருத்துவர் சத்தியலிங்கத்தையும், நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக இரா. சாணக்கியனையும் , நாடாளுமன்றக் குழுவின் தலைவராக எஸ். சிறீதரனையும் நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஒரு குழு நியமித்த பதவியை மாற்றுவதற்கான அதிகாரம் அந்தக் குழுவிற்கே உள்ளது.
அரசியல் குழு அவர் மீது நம்பிக்கை வைத்து ஒருமனதாக இந்தப் பதவியை வழங்கியது.
அவர் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அரசியல் குழு இரண்டு தடவைகள் ஆலோசனை வழங்கியிருந்தது.
திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்திலும் சுமார் 4 மணித்தியாலங்கள் இது குறித்து வலியுறுத்தியும் அவர் செவிமடுக்கவில்லை.
கட்சியின் எந்த உயர் சபை அவருக்குப் பதவியை வழங்கியதோ, அந்தச் சபையின் ஆலோசனையை அவர் நிராகரித்ததால், அந்தப் பதவியை அவரிடமிருந்து மீளப் பெறத் தீர்மானித்துள்ளோம் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அவ்வாறு சிறீதரனைப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான எந்தவொரு இறுதித் தீர்மானமும், இதுவரை எடுக்கப்படவில்லை என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.