பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என தென்னிலங்கையிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பனவே இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.
சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேற்படி சம்பவம் நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதால், இந்தப் படுகொலை குறித்து நியாயமான விசாரணை நடக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். மேலும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, “ தமது பணியை சரிவர செய்யமுடியாவிட்டால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீடு செல்ல வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.