இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் தான் விலகுகின்றார் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் தான் விலகுகின்றார் என்று அவர் அறிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தபோது அதில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தினுடைய மற்றும் கொழும்பு வாழ் மக்களினுடைய கோரிக்கைக்கு அமைவாக தான் விண்ணப்பத்தை கொடுத்திருந்ததாகவும், அதனை எந்தவொரு காரணமும் இல்லாமல் சுமந்திரன் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுமந்திரன் தான் சார்ந்த அணியை வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்து கட்சிக்காகத் தொடர்ச்சியாகப் பாடுபடுகின்ற மிக முக்கியமான திறமைசாலிகளை உள்ளெடுக்காததன் அடிப்படையிலும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்களுக்குப் பொறுப்புச் சொல்ல முடியாத ஒரு கட்டத்தால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
"தான்தோன்றித்தனமாகத் தமிழரசுக் கட்சியின் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் கட்சியைப் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தின் ஊடாக முழுச் செயற்பாடுகளையும் நிர்வகித்து வரும் சுமந்திரன் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி வரலாற்றில் பல தியாகங்களாலும், வீரம் செறிந்த பல போராட்ட சரித்திரங்களாலும் 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்த் தேசியத் தலைவரின் உயர்ந்த சிந்தனையின் அடிப்படையில் வீடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது.
அந்த வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, தமிழரசுக் கட்சிகளின் தூண்களையும் வெளியேற்றி, மேலும் தென்னிலங்கையின் முகவர் அரசியல் செய்வதற்கு முற்படுகின்ற சுமந்திரனின் தான்தோன்றித்தனமான செயற்பாடு ஒட்டுமொத்த தமிழரசுக் கட்சியையும் அழிக்கும்.
எனவே, என்னை நேசிக்கும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டம், வடக்கு - கிழக்கு மக்களுக்கு நான் அறியத் தருவது என்னவென்று சொன்னால் வீரத்தின் பால் வழிநடத்தப்பட்ட கட்சி இன்று சோர்விழந்து சோரம் போகின்ற ஓர் ஆபத்தான நிலையில் இருக்கின்றபடியால் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் நான் விலகுகின்றேன்.
தமிழ்த் தேசிய விரோதிகளின் கைகளுக்குள் சிக்குண்ட தமிழரசுக் கட்சியில் தொடர்ந்தும் பயணிப்பது பொருத்தமற்றது என்பதால் இந்த முடிவு எட்டப்படுகின்றது.
தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டு தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகி இருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியில் பயணிக்க முடியாது
தேசியத்தைக் கண்முன்னாலே குழி தோண்டிப் புதைக்கின்ற செயற்பாடுகளுக்குத் துணை போகின்ற வரலாற்றுத் துரோகத்தை நான் செய்யத் தயார் இல்லை என்பதால் தமிழரசு கட்சியில் இருந்து விலகிக்கொள்கின்றேன்.
தமிழ்த் தேசியத்தை உரிய பலத்துடன் நிலைநாட்ட என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்குண்டான வழிவகைகள் குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதற்கு முடிவெடுத்துள்ளேன்." - என்றுள்ளது.