எயர் பஸ் விமானக் கொள்வனவில் இலஞ்சமாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள அவர், ஆணைக்குழுவிடம் அளித்த வாக்குமூலத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளதாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில், இன்று நடந்த வழக்கு விசாரணையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேக நபரான கபில சந்திரசேனவின் வாக்குமூலத்தின்படி, அவர் இலஞ்சமாகப் பெற்ற 60 மில்லியன் ரூபா, மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று தவணைகளில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் 20 மில்லியன் ரூபா, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபில சந்திரசேனவின் மனைவியின் பெயரில் புருணையில் ஒரு போலி நிறுவனம் நிறுவப்பட்டு, அந்த நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் ஒரு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த ஏற்பாட்டின் மூலம், ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோ இலஞ்சமாகப் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த நிதி அவுஸ்ரேலியாவில் உள்ள கொமன்வெல்த் வங்கியில் இருக்கும் கபில சந்திரசேனவின் கணக்கிற்கு மாற்றப்பட்டதும், இலஞ்சப் பணத்தின் பகுதிகள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு பணிப்பாளர் மற்றும் உயர் பதவியில் உள்ள பல அரசாங்க அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான கபில சந்திரசேனவை கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம, ஏப்ரல் 2 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.