'நீலகாமம் பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்கு புரிகின்றது. எனவே, தவறான தகவல்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம்.'
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் வலியுறுத்தினார் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா.
' நாம் நீலகாமம்' பிரகடனத்தை மனோ கணேசன் இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றி இருந்தார். அவரின் உரையின் பிறகு கருத்து வெளியிடுகையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
'நீலகாமம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் சபையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அரசாங்கமே முன்னின்று, அரசாங்கத்தின் அனுமதியுடனேயே இது (தாக்குதல்) நடத்தப்பட்டது என்பதையே அவர் (மனோ கணேசன்) கூற முற்படுகின்றார்.
ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பிரச்சினையை எவ்வாறு அணுகுகின்றது என்பதும் மக்களுக்கு தெரியும்.
போலியான தகவல்களை மக்கள் மயப்படுத்துவதை நிறுத்துங்கள். உங்களது அரசாங்கம்தான் (ஐதேக) 83 களில் தோட்டங்களை எரித்தது.
கைதுகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் குறைகூறவே இவர்கள் (எதிரணி) முயற்சிக்கின்றனர்.
மலையகத்தில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு அதிகரித்துவருகின்றது.
மே தினத்தைக்கூட ஒழுங்காக செய்ய முடியாத அந்த நபர்களுக்கு (மலையக கட்சிகள்) அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை.' என்றார் பிரதி அமைச்சர்.
இதன்போது கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,
'பிரதி அமைச்சர் இங்கு பொய்யுரைக்கின்றார். மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அரசாங்கத்தை தொடர்பு படுத்தவே இல்லை. அவர் தாமாகுவே தொப்பியை போட்டுக்கொள்கின்றார். விசர்தனமாக கதைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.' என்றார்.