எழுச்சி பாடல்களைப் பாடி, சமூக ஊடங்களில் பதிவிட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் மீது விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில், கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான சங்கீதன், பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தார்.
அதனையடுத்து, இசை நிகழ்வில் தான் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பாடல்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பரவிய நிலையில், குறித்த காணொளி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் நேற்று முன்தினம் குறித்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, சாவகச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதனையடுத்து சாவகச்சேரி காவல்துறையினர் குறித்த இளைஞனை நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முற்படுகிறார் என அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து, அவரை எதிர்வரும் 17ஆம்திகதிவரை விளக்கமறியில் வைக்க அனுமதி கோரினர்.
இதையடுத்து சாவகச்சேரி நீதிமன்றம் குறித்த பாடகரை 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.