" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ சூழ்ச்சியுடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு உள்ளது. நீர்கொழும்பு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் தகவல்களை திரட்டியுள்ளார்.
சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. திட்டமிட்ட அடிப்படையிலேயே உணவு தவிர்ப்பு போராட்டத்தைக்கூட முன்னெடுத்திருந்தார்.
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தொலைபேசி மற்றும் மடிக்கனிணி என்பவற்றின் கடவுச்சொல்லைக்கூட அவர் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கவில்லை. தகவல்களை மூடிமறைக்க முற்படுகின்றார்.
ஆனால் இதுவரை கிடைக்கப்பெற்ற விஞ்ஞானப்பூர்வமான சாட்சியங்களின் அடிப்படையில் அவருக்கு மேற்படி சூழ்ச்சியுடன் தொடர்பு இருப்பது தெரியவருகின்றது. எனவே, விசாரணை தொடர்ந்து இடம்பெறும் எனவும் அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக முஸ்லிம் பிரஜைகள் நால்வரை ஈடுபடுத்தி, நீர்கொழும்பு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபடவரும் பக்தர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய தகவல்களை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்வாறு தகவல் திரட்டுவதற்கு பயன்படுத்தவர்களில் ஒருவர், தேடப்பட்டுவரும் சந்தேகநபர் பட்டியலில் இருந்தவர். ஐஸ் அமைப்பின் சித்தாந்தத்தில் இருந்தவர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்த நாளில் இருந்து அவர் மாயமாகியுள்ளார்.
சஹ்ரான் உட்பட இஸ்லாம் அடிப்படைவாதிகளால் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரால், தகவல் வழங்கப்பட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அலட்சிய போக்குமூலம் தாக்குதலுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
உளவு தகவலை வழங்கிய அதிகாரி சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அவரை கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அழைத்து சுரேஷ் சலே மன்னிப்பு கோரியுள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
சனல் - 4 ஊடகத்துக்கு அசாத் மௌலான வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை நடத்துவதற்குரிய சூழல் சுரேஷ் சலேவால் உருவாக்கிக்கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரொருவருக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் சுரேஷ் சலேவுக்கு வழங்கப்பட்டுள்ளன. நடைமுறை மீறப்படவில்லை. சட்ட ஆலோசனை பெறுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
கைது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டது.
சந்தேக நபர் ஒவ்வொரு புதன்கிழமையும் சட்டத்தரணியை சந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குடும்ப உறுப்பினருடன் கதைப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்திக்க முடியும்.
நீதிபதி சிஐடிக்கே வந்து, சந்தேக நபரை கண்காணித்துள்ளார். அவரிடம் கேள்விகளை கேட்டுள்ளார். இதன்போது சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறப்படுவது தொடர்பில் எவர் எதனையும் கூறவில்லை.
எனவே, சித்திரவதை என சிலரால் தற்போது போலி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னர், சுரேஷ் சலேவின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து, உண்ணாவிதரப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
திட்டமிட்ட அடிப்படையிலேயே அவர் உணவை தவிர்த்துவந்தார்.
சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றின் கடவுள்சொல்லைக்கூடு வழங்கவில்லை. தகவல்களை மறைக்க முற்படுகின்றார்.
உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் இடம்பெற்றாலும் விசாரணையை நிறுத்தமாட்டோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும். உண்மையான சந்தேக நபர்களை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும்.” – என்றார்.