10 பேருக்கு மேல் கொரோனா - முடக்கப்பட்டது ஹட்டன்!

banner

ஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (27) காலை வெளியான பீசீஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





இதனையடுத்து இவர்களை சிகிச்சை முகாம்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டுசெல்லும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகின்றது.





பேலியகொடை மீன் சந்தைக்குசென்றுவந்த ஹட்டன் நகரத்தில் உள்ள மீன் வியாபாரியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை நேற்று முன்தினம் (25.10.2020) உறுதிப்படுத்தப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். நெருங்கிய தொடர்பை பேணியவர்களுக்கு பீசீஆர் பரிசோதனையும் நடத்தப்பட்டது.





அந்த முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதன்படி குறித்த மீன் வியாபாரியின் குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கும், அவரின் சாரதிக்கும், சாரதியுடன் தொடர்பை பேணிய ஒருவருக்கும், மீன் கடைக்கு அருகில் உள்ள கோழிக் கடையில் பணியாற்றிய இருவருக்கும், அவர்களுடன் தொடர்பை பேணிய ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.





அதேவேளை, ஹட்டன் நகரம் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.