'வவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் எயிட்ஸ் அதிகரிக்கும் அபாயம்'

banner

வவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் எயிட்ஸ் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.





வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.





அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,





உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம்.அதன்படி இலங்கையைப் பொறுத்த வரையில் இன்று வரைக்கும் கிட்டத்தட்ட 4,000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.





வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அதில் 11 பேர் இறந்துள்ளனர். 17 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் வவுனியாவில் 06 ஆண்களும் 05 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





பொதுவாக எய்ட்ஸ் 3 முறைகளில் தொற்றுகிறது. ஒரு நோய்த் தொற்றுள்ளவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்கின்ற போது தொற்றுகிறது. 2020ஆம் ஆண்டு ஆண் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். அவருக்கு ஒரினச் சேர்க்கையால் தொற்று ஏற்பட்டுள்ளது.





எனவே , இளைஞர்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். இளைஞர்கள் மத்தியில் வேகமானதாக பரவக் கூடிய அபாய நிலையும் உள்ளது.





இதேபோல்,நோய்த் தொற்றுள்ள ஒருவர் தனது உடலுறுப்பு தானம், இரத்த தானம் என்பவற்றை மேற்கொள்ளும் போதும் கடத்தப்படுகிறது. மூன்றாவது தொற்றுள்ள ஒரு கர்ப்பிணி தாயிலிருந்து பிள்ளைக்கு பரவுகிறது.





வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர். அதுவே, இளைஞர் மத்தியில் இந்த நோய் பரவ அதிக காரணமாக இருக்கின்றது.





ஆகவே, இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் தமக்கு தெரியாதவர்களுடன் இருக்கும் போது பாலியல் தொடர்பான தொடர்பை வைத்திருக்க கூடாது.





மேலும் ,வவுனியாவில் இருக்கக்கூடிய 36 பெண் பாலியல் தொழிலாளர்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை. என்றாலும் அவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம்." - என்றார்.