'ரிக்ரொக்'கால் வந்த வினை - 10 சிறுமிகள் யாழ் வைத்தியசாலையில் சேர்ப்பு!

banner
யாழில் ரிக்ரொக் செயலிக்கு அடிமையாகி , அதன்மூலம் காதல் வயப்பட்ட 10 சிறுமிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதீத அலைபேசிப் பாவனை காரணமாக இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 16 சிறுவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் பெற்றுவருகின்றனர் .

அவர்களில் 10 பேர் சிறுமிகள் . இவர்கள் ரிக்ரொக் செயலியைப் பயன்படுத்தி காலப்போக்கில் அதற்கு அடிமையாகி , பின் அதன்மூலம் காதல் வயப்பட்டு உளநலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதர 6 சிறுவர்கள் , நாளின் கணிசமான பகுதியை அலைபேசிக்குள் தொலைத்துக் கொண்டவர்கள் . அலைபேசிப் பயன்பாட்டில் இருந்து மீளமுடியாத நிலையில் அவர்கள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர் .

அதீத அலைபேசிப் பாவனை தொடர்பில் மருத்துவர்கள் தெரிவித்ததாவது :

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்ற அதேநேரம் தொலைபேசிப் பாவனையும் அதன் ஆபத்துக்களும் மறுபுறம் கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களையும் சிறுவர்களையும் விழுங்கி வருகின்றது .

அலைபேசிப் பாவனையால் சிகிச்சை பெறும் 16 பேர் இந்த வருடத்தில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களே , அத்துடன் இந்தப் பிரச்சினைக்குத் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுபவர்கள் மிகமிகக் குறைவே .

எனவே அலைபேசிப் பாவனையால் தம் உளநலத்தைத் தொலைத்த மாணவர்கள் சமூகத்தில் இன்னும் பல மடங்கு இருக்கலாம் . பெற்றோர் தமது பிள்ளைகளின் அலைபேசிப் பாவனை தொடர்பில் உச்சபட்சக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றனர் .