முல்லைத்தீவில் களேபரம் - பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

banner
முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக மற்றுமொரு கடற்றொழிலாளர்கள் அடங்கிய குழு ஒன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். இதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவானது.

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு தமக்கான தீர்வு கிடைக்கும் வரை முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் இன்று மூன்றாவது நாளாகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரியும், சுருக்குவலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இன்று தமக்குத் தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து ஆத்திரமடைந்து கடற்றொழிலாளர்கள் தமது படகுகள், வலைகளுக்குத் தீ வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒரு மீன்பிடிப் படகு மற்றும் வலைகள் என்பன தீயில் முற்றாக எரிந்த நிலையில் மேலும் படகுகள் மீது தீ பரவாமல் பொலிஸார் தடுத்தனர்.
இதேவேளை, குறித்த கடற்றொழிலாளர்களுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகை தந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் சுமார் 300 பேரளவில் முல்லைத்தீவு பஸ் நிலையம் அருகே முற்பகல் 11 மணியளவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதையடுத்து குறித்த கடற்றொழிலாளர்கள் மற்றும் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கடற்றொழிலாளர்கள் இடையே முரண்பாடுகள் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார், முல்லைத்தீவு கடற்கரை வீதியில் இலங்கை வங்கிக்கு முன்பாக ஒரு வீதித்தடையையும், தொடர் போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றைய போராட்டக் குழுவை நோக்கி வர முடியாத வகையில் இன்னுமொரு வீதித் தடையையும் ஏற்படுத்தினர்.
எனினும், தொடர் போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் இலங்கை வங்கி முன்பாக பொலிஸார் அமைத்த வீதித்தடையை உடைத்து கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கிச் சென்று அங்கிருந்த போராட்டக்காரர்களைத் தாக்க முற்பட்டபோது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதலையும், நீர்த்தாரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்ற நிலை உருவானது.