மன்னார் பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் ஒரு மேலதிக வாக்கினால் இன்று தோல்வியடைந்தது.
சபை அமர்வு தவிசாளர் சாகுல் ஹமீட் முகமட் முஜஹிர் தலைமையில் இன்று நடைபெற்றது.
அமர்வில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நகல் பிரதேச சபையின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜஸ்டின் கொன்சால் குலாஸ் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வௌியிட்டார். இதனை தொடர்ந்து மேலும் சில உறுப்பினர்களும் தமது எதிர்ப்பை வௌியிட்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமுள்ள மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 7 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும்
தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரும் அடங்கலாக 10 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2 உறுப்பினர்களும்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு ஒரு வாக்கினால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related Posts