'22' இல் உள்ள விசேட அம்சங்கள் எவை?

banner

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டம் ஆகியவற்றில் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையிலேயே 22 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.





அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விளக்கமளிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.





22 இல் உள்ள விசேட அம்சங்களையும் அவர் விவரித்தார்.





" ஏதேனும் ஒரு சட்டமூலம் வர்த்தமானியில், வெளியான பின்னர், அதனை சட்டரீதியாக உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த 7 நாட்களே வழங்கப்பட்டுவந்தது. அது 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக 14 நாட்களாக்கப்பட்டுள்ளன.





அமைச்சு பதவியை வகிப்பவர், பதவி விலகினால், அமைச்சின் செயலாளர் பதவியும் வலுவிழக்கின்றது. இதனால் அரச சேவை ஸ்தம்பிக்கின்றது. எனவே, அமைச்சர் பதவி விலகினாலும், புதியவர் நியமிக்கப்படும்வரை, பணிகளை முன்னெடுக்கும் அதிகாரம் செயலாளருக்கு வழங்கும் ஏற்பாடு 22 இல் உள்ளது.





அரசியலமைப்பு பேரவைக்கு கட்சி மற்றும் சிறு கட்சிகளின் சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் தொடர்பில் கட்சிகளே முடிவெடுக்கலாம். இதுவிடயத்தில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் தலையீடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சபாநாயகரின் கண்காணிப்பின்கீழ் பணி இடம்பெறும்." - எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.





மத்திய வங்கி ஆளுநர் நியமனத்துக்கு, அரசியலமைப்பு பேரவையின் அனுமதியை ஜனாதிபதி பெற வேண்டும். 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களில் இந்த ஏற்பாடு இருக்கவில்லை.





நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர், பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிப்பதற்கு 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.





அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அந்த ஏற்பாடு அவ்வாறே தொடரும்.





ஜனாதிபதி பதவியை வகிப்பவர், அமைச்சராக எடுக்கும் சில முடிவுகளுக்கு எதிராக அடிப்படை உரிமை வழங்கு தாக்கல் செய்யும் ஏற்பாடு 22 இற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.





சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையிலேயே 22 ஐ நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கின்றோம். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து புதிய அரசமைப்பொன்றிலேயே ஆராய வேண்டும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.