கோட்டாவைக் கைதுசெய்! யாழில் கையெழுத்து வேட்டை!!

banner

சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை சிங்கப்பூர் அரசு கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையினர் கையெழுத்துப் போராட்டத்தை இன்று யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபிக்கு முன்னால் ஆரம்பித்துவைத்தனர்.





இது தொடர்பில் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் எஸ். நிஷாந்தன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,





“முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, எமது தாய் மண்ணில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட 2009ஆம் ஆண்டு இனவழிப்பின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றின் சூத்திரதாரியாவார்.





இந்த இனப்படுகொலையாளனை கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்வதோடு எமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு கோருகின்றோம்.





சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்திருக்கும் கோட்டபாய ராஜபக்சவை சிங்கப்பூர் அரசு கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி உலகளாவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது





எனவே, இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபிக்கு முன்னால் இந்தக் கையொழுத்துப் போராட்டத்தை இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பித்து வைத்துள்ளது.





இந்தக் கையொழுத்துப் போராட்டம் தாயகத்தில் ஒவ்வொரு பிரதேசமாக ஒவ்வொரு நாளும் இடம்பெறும். எனவே இந்தப் போராட்டத்தில் பங்கேற்பது தாயகத்திலுள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை என நினைத்து வேற்றுமைகளை மறந்து ஒரே இலட்சியத்துக்காக ஒன்றுபட்டு கையெழுத்திட அழைக்கின்றோம்” – என்றார்.