மாணவர்களின் எதிர்ப்பைமீறி யாழ். பல்கலைக்கு நிதி உதவி வழங்கியது சீனா!

banner
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தால் 43 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியை நேற்றுப் பிற்பகல் 4 மணியளவில் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2016ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனத் தூதுவரின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நிதியுதவி பகிர்ந்து வழங்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்துக்கும், கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மட்டுமே முழுத் தொகையும் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

சீனத் தூதரகத்தின் இந்த நிதியுதவியின் கீழ் மாணவர்களுக்கான மாதந்த உதவிப்பணம் உட்பட பல நலனோம்புச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பல்கலைக்கழக நலச்சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, சீனாவிலுள்ள பல்கலைக்கழகத்துக்கும் யாழ். பல்கலைக்கழகத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட இருந்த வேளையில், யாழ். பல்கலையில் சீனத் தூதுவரின் தலையீட்டுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது.

அதேவேளை, மேற்படி நிதி உதவி வழங்கலுக்கான சீனத் தூதுவரின் பல்கலைக்கழக விஜயமும் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.