9 மாதங்களில் 237,649 பேர் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

banner
இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்கு தொழில்களுக்காக செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில்களை தேடி வௌிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் தொழிலுக்காக 237,649 பேர் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

கடந்த வருடம் முழுவதும் சுமார் 122,000 பேர் தொழில் நிமித்தம் வௌிநாடு சென்றிருந்ததாக பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி.சேனாநாயக்க கூறினார்.

இதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை இந்த வருடம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, கடந்த 9 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக வைத்தியர்கள் பலர் நாட்டிலிருந்து வௌியேறி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவித்தார்.

வௌியேறிய 500 வைத்தியர்களில் 60 பேர் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்காமல் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் விடுமுறை வழங்காமல் காலத்தை இழுத்தடிப்பதால் பல வைத்தியர்கள் சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்காமல் நாட்டை விட்டு வௌியேறும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.